| | | | |
ஆசிரியர் வீரமணி
1962இல் முந்தைய ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்கள் விலகிய நிலையில் விடுதலையை நாளேடாகத் தொடர இப்படி ஒருவர் தேவை என்று விரைந்து கி.வீரமணியை சென்னை மருத்துவமனையில் அய்யா அவர்கள் இருந்தபோது அழைத்துப் பேசியதும், கி.வீரமணியுடைய வாழ்வினையர் மோகனாவுடன் கலந்து ஆலோசித்து இருவரும் இணைந்து முடிவு எடுத்து சென்னைக்கு வந்தார்கள். அவர்கள் குடும்பச் செலவுப் பொறுப்பை கி.வீரமணியின் மாமனார் மாமியார் ஏற்றுவிட்டதால், கி.வீரமணியின் முழுநேர உழைப்பு கவலையின்றித் தொடர, கி.வீரமணியின் வாழ்விணையர் கி.வீரமணிக்கு முழு ஒத்துழைப்பு தந்து, இல்லத்துக் கவலையை, பொறுப்பை ஏற்றவராகியே வாழ்ந்துவிட்டார். கி. வீரமணி இயக்கத்தின் முழுநேரத் தொண்டனாகத் தொடர்கிறார்.
10.8.1962 விடுதலைக்கு கி.வீரமணி ஆசிரியராக பொறுப்பேற்றதற்கு தந்தை பெரியார் அவர்கள் வரவேற்கிறேன் என்று விடுதலையில் வெளியிட்ட அறிக்கை: தந்தை பெரியார் கி.வீரமணியிடம் விடுதலை பொறுப்பை ஒப்படைத்தல்
06.06.1964 தந்தை பெரியார் விடுதலை யில் தலையங்கப்பகுதியில் ஒப்படைத்துவிட்டேன் என்ற தலைப்பில்  கி. வீரமணியைப் பற்றி வெளியிட்ட அறிக்கை: கி.வீரமணி அவர்கள் எம்.ஏ.,பி.எல். பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும், புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ.,பி.எல். பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்குத் தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ.500, ரூ. 1000 என்பதான வரும்படி வரும் நிலையில் தொழில் வளம் பெற்று வரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல்  பொதுத்தொண்டு செய்ய ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்பது உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் விடுதலை ஆசிரியராகவும் பயன்படுத்திக்கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்துவிட்டேன். விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம். இனி விடுதலைக்கு உண்மையான பிரசுரகர்த்தாவாகவும், ஆசிரியராகவும் வீரமணி அவர்கள்தான் இருந்து வருவார்.

எந்த நிலையில் வீரமணி அவர்கள் இந்தப் பொறுப்பை ஏற்கிறார் என்றால் விடுதலையை நான் நிறுத்திவிடப் போவதை அறிந்த சிலர் விடுதலை பத்திரிகைக் காரியாலயத்தையும், அச்சு இயந்திரங்களையும் மாதம் 1-க்கு 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வாடகைக்குக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அதை வாடகைக்குக் கொடுப்பதைவிட நிறுத்திவிடுவதே மேல் என்று நம்முடைய நண்பர்கள் எல்லோரும் நமக்கு வேண்டுகோளும், அறிவுரையும் விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இயக்க நலத்தையே குறியாகக் கொண்டு பொறுப்பேற்க முன்வந்தார். ஆகவே விடுதலையின் 25-வது ஆண்டுத் துவக்கத்தில் லட்ச ரூபாய்களை விடுதலை நடப்புக்காகச் செலவிட்டு நஷ்டமடைந்து நிலையில் ஏற்க முன்வந்த வீரமணி அவர்களது துணிவையும், தியாகத்தையும், சுயநலமற்ற தன்மையையும், கருதி விடுதலை வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறதுஎன்று குறிப்பிட்டார் தந்தை பெரியார் அவர்கள். 1962-ல் ஏற்றுக் கொண்ட பணியைத் தொடர்ந்து 50 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாகச் செய்துவருகிறார். 4 பக்கங்களுடன் சென்னையில் இருந்து வந்துகொண்டிருந்த விடுதலை -இன்று எட்டு பக்கங்களுடன் சென்னை, திருச்சி என இரண்டு பதிப்புகளில் வெளிவந்துகொண்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து, உண்மை, The Modern Rationalist, பெரியார் பிஞ்சு ஆகிய இதழ்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இணையதளங்கள் மூலமாகவும் மேற்கண்ட இதழ்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியார் பணியைப் பரப்புகின்றா.

 




  | | | | |